மரணம் விளைவிக்கும் வாகனமோட்டிகளுக்குச் சிறை தண்டனை :தண்டனை மன்றம் உறுதி செய்யும்
கோலாலம்பூர், 26 ஜனவரி- கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்தி மரணத்தை விளைவிக்கும் வாகனமோட்டிகளுக்கு சரியான தண்டனை வழங்குவதை உறுதி செய்ய தண்டனை மன்றம் ஒன்றை அமைக்க வேண்டும் என மலேசிய வழக்கறிஞர் மன்றம் பரிந்துரைத்துள்ளது.
இம்மன்றம் அமைக்கப்படுவதன் மூலம், வாகனமோட்டிகள் சாலைகளில் செய்யும் தவறுகளுக்கு ஏற்றவாறு தண்டனை வழங்க முடியும் என மலேசிய வழக்கறிஞர் மன்றத் தலைவர் லிம் சீ வீ தெரிவித்தார்.
சாலையில் செல்லும் மற்ற வாகனமோட்டிகளுக்கு மரணத்தை விளைவித்தால் கட்டாய தண்டனை வழங்குவது முறையல்ல. மேலும், அவ்விபத்து எந்த அளவுக்குக் கடுமையாக நிகழ்ந்துள்ளது என்பதையும் சீர்தூக்கி பார்க்க வேண்டும் என லிம் சீ வீ தெரிவித்தார்.
செய்யப்படும் குற்றத்தின் அடிப்படைக் கூறுகளை ஆராய்ந்த பின்னரே, குற்றவாளிக்கு எத்தகைய தண்டனை வழங்கலாம் என்பது குறித்து நிர்ணயம் செய்ய முடியும் என்றும் அவர் கூறினார்.
“அதே வேளையில், குற்றத்திற்கு தண்டனையாக மட்டுமல்லாமல், சாலை விபத்துக்களைக் குறைப்பதில் ஒரு நிவாரணமாகவும் அமைய வேண்டும்” என்றார் அவர்.
முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை, மலேசிய சாலை பாதுகாப்பு மன்றத் தலைவர் டான் ஸ்ரீ லீ லாம் தை, சாலைகளில் கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்தி, மற்றவர்களுக்கு மரணத்தை விளைவிக்கும் வாகனமோட்டிகளுக்குக் கட்டாய சிறை தண்டனை வழங்க வேண்டும் என வெளியிட்டிருந்த கருத்து குறித்து லிம் சீ வீ இவ்வாறு கூறினார்.



Post your comment